புதன், 20 மே, 2020


                    எங்கள் வீட்டு வேப்பமரம்


நீ சுயம்பு
எங்கள் பெரியவர்களில்
யாரோ
பறவைகளில் எதோ

சிறுவர்களாக இருந்த
நாங்கள் வேப்பமுத்தை
வைத்து விளையாடிய
போது தோற்ற‌வேகத்தில்
தூக்கியெறிந்தோ

எப்படியோ
நீயாக முளைத்தாய்

உன்னை நீரிட்டு வளர்த்தோமில்லை
உரமிட்டு உரமேற்றினோமில்லை
வலையிட்டு பாதுகாத்தோமில்லை
கூண்டடைத்து உயரவிட்டோமில்லை
எப்படியோ வளர்ந்து நிற்கிறாய்

ஒரு நாடற்றவன் போல
வீடற்றவன் போல
பெற்றோர் அற்றவன்‌ போல

பல புயல்கள்
சில பழிவாங்கல்கள்
சுழன்றடிக்கும்
சூறைக்காற்றுகள்
பெருமழைக்காலம்
சிற்சில சிரச்சேதங்களோடு
தப்பி வந்தாய்...

நாளையே வனங்களை
அழிக்கும் கடும்புயல்
வன்மம்
விடாப்பழிவாங்கல்
பெரிய வீடோ
நானோ
என்னைச்சார்ந்தோரோ
எவரேனும் வரலாம்
உன்னை அழிக்க....
                           - நம்தேவ்

திங்கள், 11 மே, 2020

சிரித்து விட்டாய்

                      சிரித்து விட்டாய்


ஆம்
நீ 
சட்டென
சிரித்து விட்டாய்

சிலையாகி விட்டால்
எம்முனிவன்
கை படுமோ
யுகங்கள் காக்க வேண்டும்

அதை நான் 
ஓராயிரமுறையல்லவா
ஸ்லோமோசனில் 
மனத்திரையிட்டுப் பார்ப்பேன்

ஐயோ
நீ 
சட்டென
சிரித்து விட்டாய்

மேலுதடு 
கொஞ்சம் 
நோஞ்சான் தான்

கீழுதடு
கொஞ்சம்
குண்டன்தான்

அதென்ன
வெள்ளைத்தங்கங்கள்
கிரிக்கெட் மைதான
ஓவல் வடிவில்
நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன.

வயதான பிறகு
உனக்கும்
பற்கள்
விழுமா

உதடுகளில்
சுருக்கங்கள் கூட
விழுமா

தற்கொலை செய்துகொள்ளப்
போகிறவர்களுக்கு
ஆலோசனை தரும்
எண்ணில்
உன்‌சிரிப்பை காலர் டியூனாக
வைத்து விடலாம்

என்னைப்பார்
யோகம் வரும்
படம் போல

என் சிரிப்பைப்பார்
கவலை தீரும்
என்று
விளம்பரப்படுத்தலாம்

ஒரு பற்பசை
நிறுவனத்தில்
மாடலாக
உன்னை இன்னும்
நியமிக்காதது ஏன்

இதையெல்லாம்
விடு
உன் உதடுகளையும்
பற்களையும்
இன்சூரன்ஸாவது
செய்யேன்.

ஆம்
நீ
சிரித்தே விட்டாய்
நான்
சிதைந்தே
விட்டேன்
   
                                -நம்தேவ்

வெள்ளி, 8 மே, 2020

                              பாவம் அது

அதன் கால்களை
எண்ணுகின்றான்

உயிர்‌ ஊசலை இரசிக்கிறான்

தலையை
எத்தனைமுறை
சுற்றுகிறதென
அவதானிக்கிறான்

தன்மேல்
படரவிட்டு
படரவிட்டு
படரவிட்டு
கடிவலியை
உணர்கிறான்

தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுச்
சிறைப்பிடிக்கிறான்

சில நேரங்களில்
தாயாய்
விளையாட்டுப்பொருளாய்
உணவுப் பொருளாக
எதிரியாய்
எறும்பாகவும்
குழந்தையின்
கையில் கிடக்கிறது
எறும்பு

மாண்புமிகு
நீதிபதியே
என் மரணத்தை
உடனே அறிவியுங்கள்
மன்றாடுகிறது
பாவம் அது

சொர்க்கம் நிச்சயம்

                                     - நம்தேவ்


புதன், 6 மே, 2020

தூய்மைப் பணி

           தூய்மைப் பணியாளர்

"குப்பக்காரன் வந்துட்டான்"

சிறுமியின் மழலைச்சொல்
இனிமை

பணம்‌வைத்திருப்பவன்
பணக்காரன்‌ஆனபோது
குப்பை வாங்க வந்தவன்
 எப்படி குப்பைக்காரன்

இந்த உலகையே 
புறத்தூய்மை 
செய்தவர்கள்

தண்டவாளமாய்
எத்தனையோ
நோயென்னும்
இரயிலை
தன் மேல் வாங்கியவர்கள்..

குடித்து 
குடித்தே 
குடல் எரிந்து
குழைந்து போனான்..

உண்மையில் 

துப்புரவு செய்து
துப்புரவு செய்தே
துவண்டு போனான்..

எச்சில் சோறு

உடைத்துப்
போட்ட பாட்டில்

குடலை வெளியே
காயப்போடும்
நாற்றம்

துப்பிய சாலைகள்

அப்பிய தூசிகள்

சாக அழைக்கும்
சாக்கடைகள்

நேற்று கிணற்றிலே
விழுந்தழுகிய பிணம்

இன்று கொலையுண்டு
கிடந்தழுகிய சடம்

நாளை இறக்கப்போகிற
மனித உடல்


தொட்டால்
தொடரும்
படரும்
கொல்லும்
மணிமுடிநுண்ணி

அனைத்தையும்
கரங்களால்
அள்ளியவர்

தூய்மைமைப் பணி
சேவைப்பணி
                                   
                                            -நம்தேவ்




திங்கள், 4 மே, 2020

கவிதை

           வேறு எப்படிச் சொல்வேன்


 ஒவ்வொரு
 வாட்சாப் 
 உரையாடலிலும் 
 தட்டச்சு செய்துவிடலாமா?

சடக்கென்று
முகநூலில் 
ஒரு பதிவிட்டுவிடலாமா?

 ஸ்டேட்டஸில் ஓரிரு காப்பியடித்த
 கவிதைகளை வைத்து
 உணர்த்திவிடலாமா?

 சிற்பக்குகையில்
 இரு பெயர்‌பொறித்த
 கல்வெட்டை
 அழைத்துச் சென்று
 காட்டிடலாமா?

 தூதொன்றை
 விட்டு விடலாமா?

 பல யாமம்
 தனித்திருந்தே

 பல யாகம்
 செய்திட்டே

தைரியத்தை
வாடகைக்கு வாங்கி
ஒரு ஆயுதமில்லா
போர்வீரன்
நின்று போராடுவதைப்
போல
நேருக்கு நேர் நின்று
நிதர்சனத்தை
சொல்லி விடவா?

வேறு எப்படிச்சொல்வேன்
காதலை உன்னிடம்?

                                            - நம்தேவ்





















சனி, 2 மே, 2020

ப்ரேக் அப்


                              ப்ரேக் அப்

உன் பிரிவென்பது
என்னை
இன்னும்
துளைக்காத தோட்டா

அதிசிறந்த
சிறகுப்பந்தாட்ட
வீரர்களால்
சிறகொடிந்த
பந்தைப் போன்றது
என் காதல்

பேரிடர் காலங்களில்
இன்னும்
உணவு கிடைக்கப் பெறாத
ஒரு பணக்காரனின் பசி
என் காதல்

ஒரு பல்லி வாயிலில்
சிக்கித் தவிக்கின்ற
பெரிய பூச்சியும் கூட

உவமைகளை
இப்படி
அள்ளித்தெளித்தால்
நின்று விடவா போகிறது
நம் பிரிவு

தோட்டா 
துளைத்தால் தானே
அது 
தோட்டா...
                                        - நம்தேவ்

புதன், 29 ஏப்ரல், 2020


                                  நிறப்பகிர்வு


  இன்றும் நடந்துவிட்டது
  அந்தத் தழுவல்

  என்ன ஒரு தழுவல்
  காற்று கூட உட்புகமுடியாதபடி
  ஒரு ஆழ்ந்த தழுவலில்
  உணர்சிகளைப் பகிரலாம்
  இதென்ன கொடுமை
  நிறங்களின் பகிர்வு

  எத்தனையெத்தனையோ
  முறை
  இந்தத் தவற்றைச்
  செய்திருக்கிறேன்.
  எத்தனை முறை
  இணைந்து விடக்கூடாதென்று
  தடுத்திருக்கிறேன்.

  மதி மயங்கி நிற்கிறேன்.

  தூக்கியெறிந்து விட்டேன்

  இனி தேவையில்லை
  பேண்ட்டோடு
  ஊறவைத்த
  புதுச்சட்டை
  சாயம் கக்கிவிட்டதை
  வைத்து வேறென்ன செய்யமுடியும்..

                                          -நம்தேவ்

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...